திருச்சியை உலுக்கிய மாணவியின் மரணம்… “கலெக்டர் ஆபீஸில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை”… திடீரென போராட்டத்தை கைவிட்ட செவிலியர்கள்…!

By Nanthini on வைகாசி 24, 2026

Spread the love

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர், தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனக் கூறி, சக செவிலியர்களும் மாணவிகளும் தங்களது சக தோழியின் மரணத்திற்கு நீதி கேட்டு மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், மருத்துவமனை நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக, மாணவியின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம், ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரின் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது.

   

இந்த விசாரணைக் குழுவிற்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் என். பாஸ்கர் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர்களான எம். பாரதி மோகன், பி. சண்முகசுந்தரம் (மயக்கவியல்) மற்றும் என். ஜெயபிரகாஷ் (மருத்துவம்) ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், விசாரணையில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி செவிலியர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நீடித்தது.

   

இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட 10 பேரை மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட சுமுகமான சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது, அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவினர் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.