தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) தலைமை அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தமிழகத்தில் இதுவரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அவற்றுடன் இணைந்து செயல்பட்டு வந்த மதுக்கூடங்களும் (பார்கள்) முழுமையாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அரசாணையின்படி மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளையும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களையும் மூடுவதற்கான பணிகளை அதிகாரிகள் மிகவும் துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளர்களின் வாழ்வாதாரமும் நலனும் பாதிக்கப்படாத வகையில், அவர்களை அருகிலுள்ள இதர மதுபானக் கடைகளில் மறுபணியமர்த்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், மதுக்கூடங்களும் இரவு 10.00 மணிக்குள்ளாகக் கட்டாயம் மூடப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், மதுபானங்களை அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட (MRP) கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது துறை ரீதியான தக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.
