கோவை சிறுமி கொலை விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், விசாரணையைத் தீவிரப்படுத்தவும் நேரடியாக கோவைக்கு விரைந்துள்ளார். இதற்கிடையே, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கி, தங்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை சிறுமியின் உடலை வாங்கப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்து அவளுடைய உறவினர்களும், பொதுமக்களும் மருத்துவமனை வளாகத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க சிறுமியின் உடல் வைக்கப்பட்டுள்ள கோவை இ.எஸ்.ஐ (ESI) அரசு மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாகக் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனை வளாகத்திலேயே முகாமிட்டுள்ள டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்தும், அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
