தமிழக அரசியலில் நடிகர் விஜய் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவர் எடுத்து வரும் பல்வேறு அதிரடி முடிவுகள் சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளன. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவரது இந்த அரசியல் இன்னிங்ஸ், ஆதரவு மற்றும் விமர்சனங்கள் என இரண்டையுமே சமஅளவில் பெற்று வருகிறது. இந்தச் சூழலில், விஜய்யின் தீவிர ரசிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான தாடி பாலாஜி வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று, இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி அரசியல் களத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
நீண்ட காலமாக விஜய்யின் தீவிர ஆதரவாளராக வலம் வந்த தாடி பாலாஜி, விஜய் அரசியல் கட்சித் தொடங்கியபோது தன் நெஞ்சில் அவரது உருவத்தைப் பச்சைக் குத்திக்கொண்டு கட்சியில் இணைந்தார். பின்னர் சில மனக்கசப்புகள் காரணமாகக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும், “என் ஆதரவு எப்போதும் விஜய்க்குத்தான்” என்பதில் உறுதியாக இருந்தார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “விஜய் சார் இப்படி செய்வார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, மக்களும் எதிர்பார்க்கலை. அவர் பதவியேற்ற முதல் நாளிலிருந்து தொடர்ந்து அதிரடியான விஷயங்களைச் செய்து, பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்” என முதலமைச்சர் விஜய்யை வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார்.
முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மட்டும்தான் செய்திகளைப் பார்ப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ள பாலாஜி, இப்போது குழந்தைகள் கூட செய்தி பார்க்கத் தொடங்கி, அரசியல் பேச ஆரம்பித்துவிட்டதே விஜய்யின் முதல் சாதனை என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். மேலும், யாராலும் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் விதைத்துள்ளதாகக் கூறிய பாலாஜி, குறிப்பாக தற்போதைய அமைச்சரவை அமைப்பில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பதை ஒரு வரலாற்றுச் சாதனையாக சுட்டிக்காட்டியுள்ளார். “எம்எல்ஏ பதவி கொடுப்பது சாதாரண விஷயம், ஆனால் இதுவரை யாரும் எடுக்காத துணிச்சலான முடிவை எடுத்து, எல்லா சமூகத்தினராலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதை விஜய் நிரூபித்திருக்கிறார்” என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து விலகிய பிறகும் “உங்களுக்கு என்னுடைய முழு ஆதரவு எப்போதும் இருக்கும் சார்” என்று தாடி பாலாஜி இந்த வீடியோவில் பேசியிருப்பது, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள், “கட்சியிலிருந்து விலகிய பிறகும் விஜய்யின் நல்ல முடிவுகளைப் பாராட்டுகிறார்” என்று ஒருபுறம் வாழ்த்தினாலும், மறுபுறம் “இது மீண்டும் கட்சியில் இணைவதற்கான சிக்னலா?” என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். எது எப்படியோ, முதலமைச்சர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் தொடர்ந்து பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதில் சந்தேகமில்லை.
