மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தவெக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வுகள் நடந்து வரும் சூழலில், இந்தச் செய்தி கட்சியின் பிம்பத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் விவாதப் பொருளாக மாறியது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிரமடைந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். தான் தமிழக அமைச்சராகப் பதவியேற்ற நாள் முதலாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தவெகவில் புதிய நபர்களை இணைப்பதாகக் கூறி பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னை வாழ்த்த வந்த கூட்டத்தில் ஒருவராக வந்த நபரை வைத்து இந்த வதந்தி பரப்பப்படுவதாகவும், அந்த குறிப்பிட்ட நபருக்கும் தனக்கும் எந்தவிதமான தனிப்பட்ட அறிமுகமோ அல்லது தொடர்போ இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
