பீகாரில் சுமார் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப்பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அச்சிறுவன் ஆட்டோ ஓட்டுவது மட்டுமின்றி, அதன் பின்னால் பல பயணிகள் அமர்ந்திருப்பதும், தங்களது உயிரைப் பற்றிய எந்தவொரு பயமும் இல்லாமல் அவர்கள் சாதாரணமாகப் பயணிப்பதும் பார்ப்போரை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 3.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டும் அந்த சிறுவனின் திறமை மற்றும் போக்குவரத்து நெரிசலை அவன் கையாண்ட விதம் ஒரு தேர்ந்த ஓட்டுநரைப் போல இருந்ததாக வீடியோவில் தெரிகிறது. அங்குள்ள உள்ளூர் மக்களும் இதனை ஒரு புதிய விஷயமாகப் பார்க்காமல், அன்றாட நிகழ்வு போல சாதாரணமாகக் கடந்து செல்கின்றனர். பீகாரில் இது போன்ற விசித்திரமான சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் “இது பீகார் தம்பி, இங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கும்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DYdXbLCz5nm/?utm_source=ig_web_copy_link
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அந்த சிறுவனின் தன்னம்பிக்கையையும் வாகனத்தை இயக்கும் திறனையும் பாராட்டி வரும் நிலையில், பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “பள்ளிக்குச் சென்று கையில் புத்தகங்களை ஏந்த வேண்டிய வயதில், வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த சிறுவன் ஆட்டோ ஓட்ட நேர்ந்திருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல, மாறாக வருத்தப்பட வேண்டிய விஷயம்” என்று தங்களது கவலைகளையும் கருத்துகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
