முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சராகப் பதவியேற்றது முதல் சி.எம். விஜய்யின் செயல்பாடுகளுக்கு தான் 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்குவதாகப் பாராட்டியுள்ளார். டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம், போதைப்பொருள் தடுப்பு போன்ற மக்கள் நலத்திட்டங்களை தவெக அரசு முதலில் செய்துள்ளதை அவர் வரவேற்றுள்ளார். மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு மாற்று வேண்டும் என்ற மக்களின் ‘சைலண்ட் அலை’ காரணமாகவே விஜய் ஆட்சியைப் பிடித்துள்ளார் என்றும், தவெக 121 தொகுதிகளைப் பிடிக்கும் எனத் தான் முன்பே கணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் நியமனத்தில் முந்தைய ஆட்சியில் இருந்தவர்களுக்கும் தற்போதைய தவெக ஆட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடித்த விஜய், கூட்டணி கட்சிகள் கொடுக்கும் அழுத்தங்களை மிகச் சுலபமாகச் சமாளித்துவிடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறப்படும் விமர்சனங்கள் வெறும் அரசியல் ரீதியானது மட்டுமே என்பதால், அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார்.
