மத்திய அரசின் வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி, இத்தேர்வை முறையாக நடத்தத் தவறிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், மோடி அரசு நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும், புதுவையில் எக்காரணம் கொண்டும் பிரெஞ்சு மொழியைப் புகுத்தக் கூடாது என்றும், இருமொழிக் கொள்கையை மட்டுமே அங்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பிரதமர் மோடியின் ஏஜென்டுகளாகவே ஆளுநர்கள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், அதன் காரணமாகவே இங்கு வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் அவலம் நிகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்றும், தற்போதைய ஆளுநர்களின் செயல்பாடுகள் அதற்கு மாறாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுச்சேரியில் தற்போதைய புதிய ஆட்சியில் முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்வு இன்னும் இழுபறியாகவே நீடிப்பதாக நாராயணசாமி விமர்சித்துள்ளார். பொதுவெளியில் அமைச்சர் பதவிக்காக ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும், புதுவைக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் அமைச்சர் கனவோடு வலம் வருவதால் தான் இந்தத் தாமதம் என்றும் அவர் சாடியுள்ளார். அமைச்சரவை அமைக்கும் முன்பே இத்தனை கோடி ஊழல் பேரம் பேசப்பட்டால், இந்த ஆட்சி எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
