2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மற்றும் இயூமுலீ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக தனது பெரும்பான்மையை நிரூபித்து, மாநில அரசியலில் தனது அதிகாரப்பூர்வ இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது கட்சியைத் தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக நடிகர் விஜய்யின் பலமாக இருந்த “விஜய் மக்கள் இயக்கம்” என்ற ரசிகர் அமைப்பு, தற்போது முழுமையான அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டு பிற மாநிலங்களிலும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, புதுச்சேரித் தேர்தலில் நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தவெக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், எதிர்க்கட்சித் வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது தவெக நிர்வாகிகளுக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
இதேபோல், அண்டை மாநிலமான கேரளாவிலும் தவெக தனது அரசியல் அடியை எடுத்து வைத்துள்ளது. திருச்சூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று, உறுப்பினர் சேர்க்கை முகாமைத் நடத்தியதோடு மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளனர். கேரளாவில் விஜய்க்கு இருக்கும் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளத்தை அப்படியே அரசியல் வாக்கு வங்கியாக மாற்றுவதே இந்தத் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் முக்கிய நோக்கமாகும். மேலும், தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் மூலம் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “தமிழகத்தில் திராவிட கட்சிகளின் நீண்டகால ஆதிக்கத்தை உடைத்து ஆட்சியைப் பிடித்த தவெக, அதே வேகத்தில் தென் மாநிலங்களிலும் தனது அடையாளத்தை நிறுவ முயல்கிறது; இதற்கு விஜய்யின் பலமான ரசிகர் கட்டமைப்பு பெரும் பலமாக இருக்கும்” எனக் கருதுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் தேசிய கட்சி அங்கீகாரத்தைப் பெறப் பல மாநிலங்களில் வாக்கு சதவீதமும், வெற்றிகளும் தேவை என்பதால், தவெக இந்த நீண்டகால அரசியல் திட்டமிடலில் இறங்கியுள்ளது. சாதாரண ரசிகர் மன்றமாகத் தொடங்கி, இன்று தமிழகத்தின் ஆளுங்கட்சியாக உயர்ந்துள்ள இந்த அமைப்பு, தேசிய அளவில் விரிவடைய முயல்வது தென்னிந்திய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
