அரசியலில் இருந்து திடீர் விலகல்.. திமுக வட்டாரத்தை உலுக்கிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் அதிரடி முடிவு..!!

By Soundarya on வைகாசி 18, 2026

Spread the love

திமுகவின் முக்கிய தலைவரும், தமிழக அரசின் முன்னாள் அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (PTR) பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்கள் பணியாற்றியதால், இனி வரும் சில காலம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு தற்போது 60 வயது நிறைவடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பி.டி.ஆர், தனது வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவரவும், ஓய்வெடுக்கவும் இதுவே சரியான தருணம் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சராகவும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய இவரது இந்த திடீர் அரசியல் ஓய்வு அறிவிப்பு திமுகவினர் மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அடுத்த தேர்தல் வரை மட்டுமே இந்த சிறிய இடைவேளை என்றும், புதிய ஆற்றலோடு மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்புவேன் என்றும் அவர் தொண்டர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.