கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளை இணைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக புதிதாக விண்ணப்பித்த 29 லட்சம் பெண்களில், தகுதியான 17 லட்சம் பேர் ஏற்கனவே திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாதாந்திர உதவித்தொகையைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி மேலும் சுமார் 15 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற புதிதாக விண்ணப்பிக்கக் காத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியான பிறகு, இந்த புதிய பயனாளிகள் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விண்ணப்ப விநியோகமும் முறைப்படி தொடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
