நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், திமுகவின் பாரம்பரிய கோட்டையான சென்னையை முழுமையாக உடைத்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தலைநகரின் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், முதல்வர் விஜய் உட்பட 14 இடங்களில் தவெக அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தரப்பில் சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினும், துறைமுகத்தில் சேகர்பாபுவும் மட்டுமே தப்பித்தனர். குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது திராவிட அரசியலில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இந்த இமாலய வெற்றியைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக வரலாற்றிலேயே இல்லாத வகையில், சென்னை மாவட்டத்திற்கு முதல்வர் விஜய் தனது அமைச்சரவையில் அசாத்திய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளார். சென்னையில் வென்ற 14 தவெக எம்.எல்.ஏக்களில் 7 பேருக்கு மிக முக்கியமான ‘டாப்’ பதவிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. கடந்த கால திமுக ஆட்சியில் சென்னையில் இருந்து அதிகபட்சமாக நான்கு பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், தவெக தற்போது அந்த சாதனையை முறியடித்து சென்னைக்கு புதிய அரசியல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அமைச்சரவை விபரங்களின்படி, பெரம்பூர் தொகுதியில் வென்ற ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருடன் திநகர் எம்.எல்.ஏ புஸ்ஸி ஆனந்த் (ஊரக மேம்பாடு மற்றும் குடிநீர் திட்டம்), வில்லிவாக்கம் எம்.எல்.ஏ ஆதவ் அர்ஜூனா (பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை), மயிலாப்பூர் எம்.எல்.ஏ வெங்கடரமணன் (உணவுத் துறை) மற்றும் எழும்பூர் எம்.எல்.ஏ ராஜ்மோகன் (பள்ளி கல்வித்துறை) ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, அமைச்சர் பதவிக்கு நிகரான சபாநாயகர் பதவி ஆயிரம் விளக்கு தொகுதி ஜே.சி.டி. பிரபாகருக்கும், அரசு தலைமை கொறடா பதவி விருகம்பாக்கம் தொகுதி சபரிநாதனுக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைநகரைச் சேர்ந்த 7 முக்கியப் புள்ளிகள் அதிகாரப் பொறுப்பில் அமர்ந்துள்ளதால், சென்னையின் உள்கட்டமைப்பு திட்டங்கள் இனி அசுர வேகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரூ.1,000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ.3,225 கோடி கொசஸ்தலை ஆறு வடிகால் பணிகள் மற்றும் ரூ.5,000 கோடி திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவதால், நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடசென்னை பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், இது வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கான தவெகவின் பலமான அடித்தளமாக மாறும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
