தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்ற கையோடு போதைப்பொருள் தடுப்புப் பிரிவை உருவாக்கக் கோப்பில் கையெழுத்திட்ட அவர், நேற்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில், முதற்கட்டமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மாநிலத்திலுள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், நேரக் கட்டுப்பாட்டை முறைப்படுத்தவும் சென்னை காவல் ஆணையர் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் ‘ஸ்ட்ரிக்ட்’ அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, FL1 எனப்படும் சாதாரண மற்றும் எலைட் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இரவு 10:00 மணிக்குள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அதேபோல, FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார் மற்றும் கிளப்/ஹோட்டல் பார்கள் முறையே இரவு 10:00 மணி மற்றும் நள்ளிரவு 12:00 மணிக்குள் ஒட்டுமொத்தமாகத் தங்களது சேவையை நிறுத்த வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரக் கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கப் போலீசாருக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரோந்து வாகனங்கள் மற்றும் பீட் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கடைகள் மூடப்படுவதை நேரில் கண்காணித்து, அதனைப் புகைப்படம் எடுத்து அதிகாரப்பூர்வ போலீஸ் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், FL2 மற்றும் FL3 பார்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் பார்களில் பாட்டில்களாக மது விற்கக் கூடாது, லூஸ் செல்லிங் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் மீறப்பட்டு, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி மதுக்கடைகளோ அல்லது பார்களோ இயங்கினால், அதற்குச் சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலைய அதிகாரிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என கமிஷனர் எச்சரித்துள்ளார். கடமை தவறும் அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் தனது உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றங்களும், அதைத் தொடர்ந்த காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
