தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறி வரும் தொடர் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நெல்லையில் மகள் கண்முன்னே இளம்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட துயர வடு மறைவதற்குள், அடுத்தடுத்து அரங்கேறியுள்ள குற்றச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இரு பெண்கள் மீது மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், அவர்கள் இருவரும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், காஞ்சிபுரம் மணிமங்கலம் அருகே பட்டப்பகலில் இரண்டு இளைஞர்கள் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற இரக்கமற்ற கொடூரக் குற்றங்கள், பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, குற்றவாளிகள் சட்டத்திற்கு அஞ்சாமல் துணிச்சலுடன் செயல்படுவதையே காட்டுகின்றன.
