உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சலூன் மேலாளராகப் பணியாற்றி வந்த ரத்னா சிங் (31) என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மங்கள் யாதவ் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மே 12 அன்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ரத்னா சிங் ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளார். அதில் தொழிலதிபர் சரத் சிங், அவரது மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அவர்களது கூட்டாளிகள் தன்னை மனரீதியாகக் கடுமையாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் ஹோட்டல் மற்றும் சலூனை பூட்டி சீல் வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சுதிர் குமார் சிங் அளித்துள்ள புகாரின்படி, தொழிலதிபர் சரத் சிங் தனது மகளைத் தொடர்ந்து சுரண்டி வந்ததாகவும், அதற்கு அவள் எதிர்ப்புத் தெரிவிக்கும் போதெல்லாம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ரத்னா சிங்கிற்கு வேறொரு இடத்தில திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது, சரத் சிங் அவர்களின் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் வீடியோ பதிவுகளை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி அந்தத் திருமணத்தை நிறுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது முக்கியக் குற்றவாளிகளான சரத் சிங் மற்றும் அவரது மனைவி பல்லவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
