மரண பயம் காட்டிய சூறாவளி.. தகர செட்-டை பிடித்தபடி வானில் பறந்த முதியவர்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

By Swetha on வைகாசி 14, 2026

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது, ஒரு திருமண மண்டபத்தில் இருந்த நன்னே மியான் என்ற நபர், பலத்த காற்றினால் பெயர்ந்து வந்த ஒரு தகரக் கூரையை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால், காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், அந்த கூரையோடு சேர்த்து அவரும் சுமார் 50 அடி உயரம் வரை காற்றில் தூக்கி வீசப்பட்டார். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காற்றில் பறந்த நன்னே மியான், சில நொடிகள் அந்தரத்தில் தொங்கியபடி சென்று அருகில் இருந்த ஒரு வயல்வெளியில் விழுந்தார். இதில் அவருக்கு கை, கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். “நான் அந்த கூரையை பிடித்து நிறுத்த முயன்றேன், ஆனால் காற்று என்னையும் சேர்த்து தூக்கிச் சென்றது; நான் எங்கே போய் விழுந்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை” என்று அவர் தனது திகிலூட்டும் அனுபவத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.

   

இந்த கோரத்தாண்டவத்தினால் பரேலியில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளியால் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன, இதனால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வீழ்ந்த மரங்களை அகற்றி, மின் இணைப்பை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பரேலி மக்கள் தங்கள் வாழ்நாளில் இவ்வளவு பயங்கரமான புயலை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.