திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைவதற்கோ அல்லது தொடர்வதற்கோ திமுக தடையாக இருக்காது என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கேற்ப, த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாக்கெடுப்பின் போது திமுகவின் தோழமை இயக்கங்களான தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்ததற்கு ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில், த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த இடதுசாரிகள், விசிக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் முடிவையும் அவர் மதிப்பதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த ஆட்சி அமையக் காரணமாக இருந்தவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியின் கடந்த மூன்று நாட்களின் செயல்பாடுகளும், அதற்குத் தோழமைக் கட்சிகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகளுமே இதற்குச் சாட்சி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சி நிலைத்திருக்கத் தேவையான பெரும்பான்மை பலம் திமுகவின் தோழமை கட்சிகளின் ஆதரவால் கிடைத்துள்ள போதிலும், இன்றைய ஆளுங்கட்சி எத்தகைய பாதையில் பயணிக்கிறது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். ஆதரவு அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஆளுங்கட்சி செயல்படுவது குறித்து தனது பதிவில் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
