திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓலப்பாளையம் பகுதியில் உள்ள குறுக்குத்தி போலீஸ் செக் போஸ்ட் அருகே முன்னதாக விபத்துக்குள்ளான லாரி ஒன்றை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியதுடன் நில்லாமல் லாரியின் பின்புறத்திலும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன், லாரி ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த ஒரு பெண் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
