தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. லட்சுமணன் முன்பு காவல் ஆய்வாளராகப் பணியாற்றியபோது, கட்டப்பஞ்சாயத்து புகாரில் சிக்கிப் பணிநீக்கம் செய்யப்பட்ட விவரத்தை தனது வேட்புமனுவில் மறைத்துள்ளதாகச் சுயேச்சை வேட்பாளர் மனோகர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் விதிகளின்படி முக்கியத் தகவல்களை மறைப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதால், இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், லட்சுமணன் தனது எம்.எல்.ஏ பதவியை இழக்க நேரிடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள இக்கட்டான வேளையில், தவெக கட்சிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அக்கட்சிக்கு, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தகுதி நீக்க அபாயம் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
