கடந்த 2021-2023 காலகட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, சுமார் 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசுக்கு ₹397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட தாங்கள் விரும்பவில்லை எனக் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரில் சிபிஐ விசாரணை தொடர்வதற்கான சட்டப்பூர்வத் தடைகள் நீங்கி, விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
