வெட்கமே இல்லையா? கண்ணாடியைப் பார்த்தாவது திருந்துங்க.. மைசூரு மாநகராட்சியின் நூதன முயற்சியை மதிக்காத நபர்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

By Swetha on வைகாசி 11, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் மைசூருவில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நூதன முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது. மைசூரு புறநகர் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள சுமார் 80 மீட்டர் நீளமுள்ள காலிச் சுவரில், ரூ. 9.5 லட்சம் செலவில் எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய துருப்பிடிக்காத இரும்புப் பலகைகள் கண்ணாடிகளைப் போல பொருத்தப்பட்டுள்ளன. அங்கு சிறுநீர் கழிக்க முயல்பவர்கள் தங்கள் உருவத்தையே தாங்கள் பார்ப்பதன் மூலம் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தி, அந்தப் பழக்கத்தைக் குறைக்கலாம் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இருப்பினும், இந்த வசதி ஏற்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே, நபர் ஒருவர் அந்தக் கண்ணாடிகளுக்கு முன்பாகவே சிறுநீர் கழித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கண்ணாடியின் முன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை நேரில் தட்டிக் கேட்டு கண்டித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

   

இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு இல்லாததே இதுபோன்ற செயல்களுக்குக் காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அதே வேளையில், வெறும் தண்டனைகளை மட்டும் வழங்காமல், போதிய அளவில் பொதுக் கழிப்பிட வசதிகளை மேம்படுத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.