தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள சூழலில், கடந்த 10 நாட்களாக அவருக்குத் தேவையான சட்ட மற்றும் அரசியல் ஆலோசனைகளை வழங்கிய தனது இளம் குழுவினரை மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வெகுவாகப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, விஜய்யின் நெருங்கிய சகாவான ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் செயல்பாடுகளையும், அவர்களுக்குத் துணையாக இருந்த டெல்லியைச் சேர்ந்த தனது குழுவின் பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியை மாற்றி அமைத்துள்ள விஜய், தற்போது காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். விஜய் முதல்வராகப் பதவியேற்பதில் நிலவிய சிக்கலான நேரங்களில், டெல்லியிலிருந்து வந்த சிங்வியின் சட்ட ஆலோசனைக் குழு முக்கியப் பங்காற்றியது. மேலும், விஜய்யின் அரசாங்கத்திற்குத் தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் துணை நிற்பதாக சிங்வி உறுதி அளித்துள்ளார்.
புதிய ஆட்சியைக் கவிழ்க்கவும், விஜய்யைத் தடம் புரளச் செய்யவும் சில வெளிநபர்கள் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட சிங்வி, மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் அத்தகைய முயற்சிகள் அவர்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், திருப்பத்தூர் வேட்பாளர் தொடர்பான வழக்கில் விஜய் தரப்புக்காக ஆஜராகி வாதிட்ட அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கடமையைச் செய்யத் தடை விதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
