“பெரம்பூரைத் தேர்வு செய்த விஜய்”… திருச்சியை கைவிட்டது ஏன்?… பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்…!

By Nanthini on வைகாசி 11, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்தத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு விஜய் வெற்றி பெற்றிருந்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 70-ன் படி, ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளின் உறுப்பினராக நீடிக்க முடியாது என்பதால், அவர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவர் தனது அரசியல் பயணத்தைத் தொடர்கிறார்.

   

விஜய் பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்ததற்குப் பின்னால் வலிமையான அரசியல் காரணங்கள் உள்ளன. சென்னையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான பெரம்பூர், நீண்டகாலமாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஆர்.டி.சேகர் வெற்றி பெற்ற நிலையில், தற்போதைய தேர்தலில் அவரை சுமார் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி விஜய் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தலைநகருக்குள் இருக்கும் தொகுதி என்பதால், நிர்வாகப் பணிகளுக்கிடையே அடிக்கடி தொகுதிக்கு நேரில் சென்று மக்களைச் சந்திக்க இது எளிதாக இருக்கும் என விஜய் கருதுகிறார்.

   

மற்றொரு முக்கியக் காரணம், பெரம்பூர் தொகுதியின் வாக்காளர் பின்னணி ஆகும். இங்குள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) ஊழியர்கள் பாரம்பரியமாக இடதுசாரிகள் மற்றும் திமுகவை ஆதரிப்பவர்கள். ஒருவேளை பெரம்பூர் தொகுதியை விஜய் ராஜினாமா செய்து, அங்கு இடைத்தேர்தல் நடந்தால் அது கட்சிக்குச் சவாலாக அமையலாம் என அவர் கணிக்கிறார். அதனால்தான், சிபிஎம் மற்றும் திமுகவின் பலம் வாய்ந்த இந்தத் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, தனது வெற்றியைத் தமிழகத்தின் அரசியல் மையப்புள்ளியில் நிலைநிறுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

 

அதேவேளையில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததன் மூலம் தனது கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். கடந்த காலங்களில் அதிமுக மற்றும் திமுக என மாறி மாறி வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில், தவெக சார்பில் ஒரு பலமான வேட்பாளரை நிறுத்தி இடைத்தேர்தலில் வெற்றி பெற வைப்பதன் மூலம், சென்னைக்கு வெளியிலும் தனது கட்சியின் பலத்தை உறுதிப்படுத்த அவர் விரும்புகிறார். ஏற்கனவே இந்தத் தொகுதியில் திமுகவின் இனிகோ இருதயராஜை வீழ்த்தி விஜய் பெரும் வாக்குகள் பெற்றுள்ள நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தல் தவெகவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு முக்கியப் பரீட்சையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.