உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச் செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கங்கை நதியில் நின்றுகொண்டு மாலை அணிவிக்கப்பட்ட தனது மனைவியின் புகைப்படத்துடன் அந்த நபர் இறுதிச் சடங்குகளைச் செய்வது போலக் காட்சியளிக்கிறார்.
தன்னுடைய மனைவி இன்ஸ்டாகிராமில் ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய ரீல்ஸ் வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்ததே இதற்குக் காரணம் என்று அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை கண்டித்தும், அறிவுரை கூறியும் மனைவி கேட்கவில்லை என்றும், இதனால் மனமுடைந்த தான் அவரோடனான உறவைத் துண்டித்துக் கொள்ளும் விதமாக அவர் எனக்கு இறந்துவிட்டதாகக் கருதி இந்தச் சடங்கைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ ‘கர் கே கலேஷ்’ (Ghar Ke Kalesh) என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இணையதளவாசிகள் மத்தியில் இது விவாதப் பொருளாகியுள்ளது. சிலர் சமூக வலைதள மோகத்தால் குடும்ப உறவுகள் சிதைந்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர். அதே சமயம், உயிருடன் இருக்கும் ஒருவருக்கு இதுபோன்ற மதச் சடங்குகளைச் செய்வது முறையற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
