சமூகத்தில் பிறப்பால் அனைவரும் சமம் என்கிற தத்துவத்தை நிலைநாட்டவும், ஜாதிய அடையாளங்களால் ஏற்படும் பிரிவினைகளைத் தவிர்க்கவும் பல்வேறு மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், தற்போது பீகார் மாநில போக்குவரத்துத் துறை ஒரு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஜாதிப் பெயர்கள், ஜாதியைக் குறிக்கும் வாசகங்கள் அல்லது அது தொடர்பான ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறையில் பலர் தங்கள் ஜாதியைத் பெருமையாகவும், வீரமாகவும் கருதி வாகனங்களின் முகப்பு மற்றும் பின்புறங்களில் பெரிய எழுத்துக்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக பீகாரில் பிராமணர், சத்திரியர், யாதவர் போன்ற ஜாதிப் பெயர்கள் வாகனங்களில் அதிகம் காணப்படுகின்றன. இத்தகையச் செயல்கள் பொதுவெளியில் தேவையற்ற பாகுபாட்டையும், சில நேரங்களில் மோதல்களையும் உருவாக்குவதாகக் கருதி, இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த வாகன உரிமையாளர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்திற்குள் வாகனங்களில் உள்ள ஜாதி அடையாளங்களை உரிமையாளர்கள் தானாக முன்வந்து அகற்ற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கெடு முடிந்த பிறகு, மாநிலம் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும், விதிகளை மீறுவோருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவை மிகத் துல்லியமாகச் செயல்படுத்த நவீன தொழில்நுட்பத்தையும் பீகார் அரசு கையில் எடுத்துள்ளது. சாலைகளில் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மூலம் வாகனங்களைக் கண்காணித்து, ஜாதிப் பெயர்கள் இருப்பின் அதன் பதிவு எண்ணைக் கொண்டு நேரடியாக அபராதம் விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தைப் பேணும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் துணிச்சலான முடிவிற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
