நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுவதில் கடும் இழுபறி நீடிக்கிறது. தற்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் 116 என்ற எண்ணிக்கையில் தவெக தவித்து வரும் நிலையில், அமமுக எம்எல்ஏ காமராஜின் ஆதரவு கடிதம் தொடர்பான சர்ச்சை விஜய்க்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தான் ஆதரவு அளிக்கவில்லை என காமராஜ் பின்வாங்கியதும், இது குறித்து விசாரணை நடத்த டிடிவி தினகரன் ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பதும் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு புறம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு தவெக-விற்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி மற்றும் லீமா ரோஸ் உள்ளிட்ட 5 முக்கிய எம்எல்ஏக்கள் பங்கேற்காதது எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக, தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினரான லீமா ரோஸ் வராதது, அவர் மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தவெக பக்கம் தாவக்கூடும் என்ற யூகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இறுதி முடிவை எடுக்க வேண்டிய திருமாவளவன் இன்னும் மௌனம் காக்கும் நிலையில், ஆட்சிக் கட்டிலில் அமர விஜய் தீவிர காய்களை நகர்த்தி வருகிறார். புதுச்சேரியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டும் கூட அதிமுக கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற்காதது, அவர்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்கத் தயாராகி விட்டார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் விஜய் பெயரைத் தவிர்க்கும் அதே வேளையில், இந்த 5 எம்எல்ஏக்களின் நிலைப்பாடுதான் அடுத்த சில மணி நேரங்களில் தமிழகத்தின் புதிய முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கப்போகிறது.
