தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எச்சரிக்கை விடுத்துள்ள யூடியூப்பர் மாரிதாஸ், தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பதிவிட்டுள்ளார். விசிக (VCK) ஆதரவு அளித்தாலும்கூட, தற்போதைக்கு பதவி ஏற்பதற்கான அழைப்பு இருக்காது என்றும், குதிரை பேரம் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார்களைத் தெளிவுபடுத்திய பின்னரே ஆளுநரின் அழைப்பு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குதிரை பேரம் நடந்ததற்கான சிறிய ஆதாரம் இருந்தால் கூட, ஆட்சி அமைக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க சட்டத்தில் இடமுண்டு என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள பல எம்.எல்.ஏ.க்கள் தங்களின் குற்றப்பின்னணிகளை மறைத்துள்ளதாக மாரிதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர்களில் யாராவது தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அதன் விளைவாக ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது என்பதையும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சட்ட ரீதியான சவால்களை முன்வைத்து அவர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
