தமிழக அரசியலில் ‘மாற்றம்’ கொண்டு வருவோம் என்று தமிழக வெற்றிக்கழகம் சொன்னதன் நிஜமான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என திமுக எம்பி வில்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளில் தமிழகம் பார்த்திராத அளவிற்கு தற்போது இங்கே ‘குதிரை பேரம்’ தாராளமாக நடப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதவியிலேயே அமரவில்லை, அதற்குள்ளேயே இத்தனை வேலைகளா? எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அமமுக எம்.எல்.ஏ தங்களுக்கு ஆதரவு அளித்துவிட்டதாகக் கூறி விஜய் தரப்பு மோசடியில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் முன்வைத்த புகாரை வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க குறுக்கு வழிகளைக் கையாளுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும், தவெகவின் இத்தகைய அரசியல் செயல்பாடுகள் ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
