தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டுமே தவெகவுக்கு கிடைத்துள்ள நிலையில், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சியமைக்கப் போராடும் நிலையில், மறுபுறம் தமிழக அரசியலின் பரம எதிரிகளான திமுக மற்றும் அதிமுக கைகோர்க்கப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது அனைவரையும் அதிரவைத்துள்ளது. திமுக 59 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகள் 9 இடங்களையும் பெற்று மொத்தம் 68 இடங்களுடன் உள்ளது. 47 இடங்களைப் பெற்றுள்ள அதிமுக, தவெகவை ஆட்சியதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்க திமுகவுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இடையே இதுகுறித்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
அதிமுகவினர் மீண்டும் “ரிசார்ட் அரசியலில்” இறங்கியுள்ளனர். புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு அசைவ உணவு மற்றும் சகல வசதிகளுடன் கவனிப்பு நடந்து வருகிறது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆவதை உதயநிதி ஸ்டாலின் விரும்பாததே, அதிமுக – திமுக இடையிலான இந்த வினோத கூட்டணி முயற்சிக்கு அடிப்படை காரணமாகக் கூறப்படுகிறது. அதிமுக தரப்போ, தங்களை அணுகாமல் சிறிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியதால் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.
தற்போது சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக போன்ற கட்சிகள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அமையும். திமுகவின் ஆதரவுடன் எப்படியாவது ஆட்சியமைத்துவிட வேண்டும் என்ற உறுதியோடு எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வரும் நிலையில், அமைச்சரவை பட்டியல் மற்றும் வாரியப் பதவிகள் குறித்த பங்கீடுகளும் இப்போதே ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது தவெக தனது பலத்தை நிரூபிக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
