தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்த கூட்டணி அழைப்பிற்குப் பிறகு திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைக் காண்பித்துவிட்டுப் பதவியேற்க வாருங்கள் என்று ஆளுநரால் ஒருபோதும் சொல்ல முடியாது.
ஒரு கட்சிக்குத் தேவையான பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைச் சட்டப்பேரவையில் தான் நிரூபிக்க வேண்டும்” என அரசியல் சாசன நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். விசிகவை தங்கள் கூட்டணிக்கு வருமாறு தவெக பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்த சூழலில், விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், ஜனநாயகக் கடமைகள் மற்றும் சட்டப்பேரவை மரபுகளை மையப்படுத்தி திருமாவளவன் முன்வைத்துள்ள இந்த கருத்து, தற்போதைய அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
