தமிழக அரசியல் சூழலில் நிலவும் பரபரப்புக்கு இடையே, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (MLAs) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆளுநரைச் சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கான அறிவுறுத்தல்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
