தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இந்த அரசியல் மாற்றத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சி தனது சொந்தத் தவறுகளாலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் அழிந்து வருவதாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர் தங்களின் சொந்த நலன்களுக்காக மட்டுமே செயல்படுவதாகவும், கட்சியின் எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய சுயநலப் போக்கின் காரணமாகவே காங்கிரஸ் கட்சி முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டு வருவதாகவும், தற்போது தவெக-வுடன் இணைந்துள்ள செயல் அக்கட்சியை மூடிவிடும் நிலைக்குக் கொண்டு செல்லும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், தவெக ஆட்சியமைக்கப் போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில், காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும் இன்னும் சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தேர்தல் முடிவுகள் குறித்துத் தனக்குச் சந்தேகம் இருப்பதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் மக்கள் காட்டும் உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினைகளை வைத்துப் பார்க்கும்போது, வாக்குகளைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
