தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டசபை’ அமையும் சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழலில், எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்புடன் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, தனிச் சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான இடங்களை வென்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உள்ளிட்ட இதர கட்சிகளுடன் தவெக தலைமை அவசரப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த இழுபறியைத் தீர்க்க, கூட்டணி கட்சிகளுக்கு ‘ஆட்சியில் பங்கு’ (அதிகாரப் பகிர்வு) வழங்கப்படும் என்ற அதிரடி உத்தரவாதத்தை தவெக தரப்பு முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான காய்நகர்த்தல்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.
