சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கி டாக்ஸிவே (Taxiway) பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பயணி எதிர்பாராத விதமாக இந்தக் காரியத்தைச் செய்துள்ளார். இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் தொடங்கியது.
இந்த அசாதாரண சூழலால் விமான நிலையத்தின் ரன்வே உடனடியாக மூடப்பட்டதுடன், பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குதித்து ஓடிய பயணியைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் மற்ற விமானங்களின் இயக்கத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
சினிமா பாணியில் அரங்கேறிய இந்தச் சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தப் பயணி எதற்காக இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுபட்டார் என்பது குறித்துப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
