உத்தரப் பிரதேச மாநிலத்தில், 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை ‘டிஜிட்டல் அரஸ்ட்’ (Digital Arrest) செய்து சித்திரவதை செய்த மோசடி கும்பலின் செயலால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணைக் மிரட்டித் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த கும்பல், அவர் தினமும் வீடியோ காலில் (Video call) வர வேண்டும் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரை மனரீதியாகக் கடுமையாகச் சித்திரவதை செய்துள்ளது.
இந்தத் தொடர் மிரட்டல்களால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், வேறு வழியின்றித் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். ஆனால், அந்தப் பெண்ணின் மரணத்திற்குப் பிறகும் அந்த மோசடி கும்பலின் அட்டூழியம் குறையவில்லை. அந்தப் பெண்ணின் உடல் தகனம் செய்யப்படவிருந்த தருணத்திலும், அவரது செல்போனுக்கு அந்த கும்பல் தொடர்ந்து வீடியோ கால் செய்து தொந்தரவு கொடுத்துள்ளது.
தனது மனைவியின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, ஒருகட்டத்தில் அந்தத் தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேசிய கணவரையும் அந்த கும்பல் விட்டுவைக்கவில்லை. மனைவியை இழந்த துயரத்தில் இருந்த அவரிடம், அந்த மோசடி கும்பல் மிரட்டும் தொனியில் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த டிஜிட்டல் மோசடி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
