சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாம்பழம் விற்று வந்த ஜெயலட்சுமி என்ற மூதாட்டியிடம், இளம்பெண் ஒருவர் போலி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்து, தனது மருத்துவச் செலவிற்காகச் சாலையோரம் பழம் விற்று வரும் அந்த மூதாட்டி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வெளியாகிப் பலரையும் கலங்கச் செய்தது. மனிதாபிமானமற்ற முறையில் உழைக்கும் ஏழைத் தாயை ஏமாற்றிய அந்தப் பெண்ணின் செயலுக்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்தத் துயரச் சம்பவத்தைக் கண்ட பல நல்மனம் படைத்தவர்கள் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வந்துள்ளனர். குறிப்பாக, ஒரு இளைஞர் அந்தப் பாட்டியிடம் ஒரு கிலோ மாம்பழத்தை 3,000 ரூபாய் கொடுத்து வாங்கி, அவரது இழப்பை ஈடுகட்டி நெகிழ வைத்துள்ளார். வீடியோ எடுத்து வேடிக்கை பார்ப்பதை விட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவுவதே உண்மையான மனிதநேயம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏமாற்றியவர்களுக்கு மத்தியில், இப்படியான மனிதநேயமிக்கச் செயல்கள் இன்னும் உலகில் அன்பு குறையவில்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.
