திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது. நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் இந்த அலுவலகத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதில் அலுவலகத்திலிருந்த கட்சிப் பெயர்ப் பலகைகள், கொடிகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இன்று காலை அலுவலகம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் உள்நோக்கம் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்ததா அல்லது சமூக விரோதிகளின் செயலா என்ற கோணத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள விஜய் ரசிகர்களிடையேயும், கட்சித் தொண்டர்களிடையேயும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
