“வெற்றி பெற்றதும் என்னை விட்டுப் போயிடாதீங்க”… மேடையிலேயே வேட்பாளர்களிடம் உருகிய விஜய்… பனையூரில் நடந்த உருக்கமான சம்பவம்!…!

By Nanthini on வைகாசி 1, 2026

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவரவிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பனையூர் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், “தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு என்னை விட்டுப் போகமாட்டீர்களே?” என விஜய் மிகவும் உருக்கமாகக் கேள்வி எழுப்பியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. குறிப்பாக, மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்து த.வெ.க.வில் இணைந்த 118 வேட்பாளர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட வாய்ப்புள்ள ‘குதிரை பேரம்’ போன்ற அரசியல் சூழ்ச்சிகளைத் தவிர்க்கவும் அவர் இந்த நேரடி விவாதத்தை முன்னெடுத்ததாகத் தெரிகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 262 தொகுதிகளிலும் களம் கண்ட த.வெ.க., அரசியல் களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்ட விஜய், ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், இரட்டை இலக்கத் தொகுதிகளில் வென்று பலமான எதிர்க்கட்சியாக அல்லது தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்போம் என்பதில் உறுதியாக உள்ளார். எடப்பாடி தொகுதியில் தொழில்நுட்பக் காரணங்களால் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அங்கு ஒரு சுயேச்சை வேட்பாளரை ஆதரித்துத் தனது அரசியல் வியூகத்தை அவர் கச்சிதமாகச் செயல்படுத்தியுள்ளார்.

   

வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் த.வெ.க.விற்குச் சாதகமாக இல்லை என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள விஜய், “நமது கட்சியின் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வெளியிடப்பட்ட கணிப்புகள் இவை; இவற்றை யாரும் பொருட்படுத்த வேண்டாம்” எனத் தொண்டர்களுக்கு தைரியம் அளித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று அதிகாலை 6 மணிக்கே மையங்களுக்குச் செல்லுமாறும், வெற்றிச் சான்றிதழைப் பெற்றவுடன் எங்கும் தாமதிக்காமல் நேராகப் பனையூர் தலைமையகத்திற்கு வர வேண்டும் என்றும் வேட்பாளர்களுக்குக் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

   

நிர்வாகிகளின் கருத்துகளும் இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது தி.மு.க.வினர் ஏற்படுத்தக்கூடிய சலசலப்புகளைத் தேர்தல் ஆணையம் கவனமாகக் கையாள வேண்டும் என நிர்மல் குமார் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், “விசில் சின்னத்தின் சத்தம் இந்தியாவையே வியக்க வைக்கும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று சரித்திரம் படைப்போம்” எனச் செங்கோட்டையன் அதீத நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய வேட்பாளர்களுக்கும் தலைமைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கட்சியை ஒரு கட்டுக்கோப்பான தற்காப்பு அரணாக மாற்ற விஜய் எடுத்துள்ள இந்த முயற்சி, மே 4-ல் மக்களின் தீர்ப்பின் மூலம் எந்தளவு கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.