குஜராத் மாநிலம் சூரத்தின் அல்தான் பகுதியில், 12 வயது சிறுமி ஒருவரை முகமது அஜீஸ் என்ற 40 வயது நபர் பட்டப்பகலில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய கொடூரச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி மதிய வகுப்பிற்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது இந்த அத்துமீறல் நடந்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்துப் பொதுவெளியில் தர்ம அடி கொடுத்தனர். போலீசார் வந்து அந்த நபரை வாகனத்தில் ஏற்றிய பிறகும், ஆத்திரமடைந்த மக்கள் அவரை வெளியே இழுத்துப் போட்டுத் தாக்கினர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இரவு நேரத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் அல்தான் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தைக் கலைக்கப் போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழல் உருவானது. குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அடுத்த நாள் குற்றச்சம்பவம் நடந்த இடத்திற்குப் போலீசார் அந்த நபரை அழைத்துச் சென்றபோதும், அங்கே கூடியிருந்த மக்கள் மீண்டும் அவரைத் தாக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
