அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை ஒருதலைபட்சமாக நீட்டிப்பதாக அறிவித்தாலும், ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையை காரணம் காட்டி ஈரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்து வருகிறது. இந்தச் சூழலில், ஈரானின் பிடிவாதப் போக்கிற்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் போர்க்கோலம் பூண்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய படைகள் தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் முடித்துவிட்டதாகவும், தாக்குதலுக்குரிய இலக்குகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஈரானின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள காமேனி குடும்பத்தை முழுமையாக குறிவைக்கத் தயாராக இருப்பதாகவும், இதற்காக அமெரிக்காவின் பச்சைக்கொடிக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது ஈரானின் அரசியல் தலைமைக்கு விடப்பட்ட நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஈரானை முழுவதுமாக இருளுக்குள் தள்ளும் வகையில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் மின்சார உள்கட்டமைப்புகளைச் சிதைத்து, பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்குவதே இஸ்ரேலின் திட்டம் என்று காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். “இந்த முறை தாக்குதலானது மிகவும் வித்தியாசமானதாகவும், கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பயங்கரமானதாகவும் இருக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரானின் அணுசக்தி மற்றும் பொருளாதார மையங்கள் மீதான இந்த அச்சுறுத்தல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
