ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச கடல் வழித்தடத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பனாமா நாட்டு கொடியுடன், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியத் துணைக்கண்டம் நோக்கிப் பயணித்த இந்தக் கப்பலை, ஓமன் நாட்டிற்கு வடகிழக்கே 15 கடல் மைல் தொலைவில் ஈரான் படகுகள் வழிமறித்தன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கப்பலின் மேல் தளம் சேதமடைந்த போதிலும், கேப்டனின் துரித முடிவால் கப்பல் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்கப்பட்டதால் கடத்தப்படும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை பிரிட்டனின் கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் ஏற்கனவே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் மோதல் போக்கே இந்தச் சம்பவத்திற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டிருப்பதும், ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா சமீபத்தில் கைப்பற்றியதும் ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதன் எதிர்வினையாகவே ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் ஈரான் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று வருகிறது.
மறுபுறம், ஈரான் தனது ராணுவ வலிமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் தலைநகர் தெஹ்ரானில் பிரம்மாண்ட ஏவுகணை ஊர்வலத்தை நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ‘கத்ர்’ (Qadr) வகை பாலிஸ்டிக் ஏவுகணைகள் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டன. கிளஸ்டர் வெடிகுண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை மொபைல் லாஞ்சர்கள் மூலம் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கடல் பகுதியில் தாக்குதல்கள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் ஏவுகணை ஊர்வலங்கள் மூலம் ஈரான் தனது பிடிவாதமான ராணுவ நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இந்தியாவிற்கு வரும் முக்கிய நீர்வழியில் இத்தகையத் தாக்குதல்கள் நடப்பது இந்தியாவிற்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்கா-ஈரான் இடையிலான இந்தப் பனிப்போர், சர்வதேச எரிசக்தி சந்தை மற்றும் கடல்சார் வர்த்தகத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், உலக நாடுகள் இந்தச் சூழலை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
