மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார் ரூ.600 கோடி சொத்துகளை மறைத்ததாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பூ ஆகியோர் இணைந்து ‘அவ்னி சினிமாஸ்’ உட்பட மூன்று நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் கிடைத்த ரூ.604 கோடி வருமானத்தை வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருமானத்திற்குச் சுமார் ரூ.180 கோடி வரி கட்டாமல் ஏமாற்றியுள்ளதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சுந்தர் சி-யின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், வேட்புமனுவில் தகவல் மறைப்பு தொடர்பான புகார்களுக்கு நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது என்றும், மனுதாரர் இது குறித்து வருமான வரித்துறையை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, சுந்தர் சி-க்கு எதிரான இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
