‘சின்னத்தம்பி’ திரைப்படத்தில் “எனக்கு கல்யாணம்” என்று கத்திக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மார்த்தாண்டன், தற்போது தனது 70 வயதில் வறுமை மற்றும் தனிமையுடன் போராடி வருகிறார். சுமார் 50 படங்களுக்கும் மேல் நடித்திருந்தாலும், சின்னத்தம்பி படத்தில் அவர் நடித்த மூன்று காட்சிகள் இன்றும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றன. தற்போது தனது பூர்வீக கிராமமான தெற்கு எரந்தையில் தனி ஆளாக வசித்து வரும் அவர், தனது குடும்பத்தினர் நகரில் வசித்தாலும், பூர்வீக சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அங்கேயே தங்கியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஓவியக் கலை தெரிந்த மார்த்தாண்டன், வாய்ப்புகள் கிடைத்தால் இன்னும் நடிக்கத் தயாராகவே இருக்கிறார். சமீபத்தில் இயக்குநர் வசந்தபாலன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தும், சூழ்நிலை காரணமாக அவரால் செல்ல இயலவில்லை. தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் இருக்க ஆசை இருந்தாலும், தனது அடையாளமான சொந்த ஊர் நிலம் பறிபோய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். வயது முதிர்ந்த காலத்திலும் யாரிடமும் கையேந்தாமல், தனக்கான உணவைத் தானே சமைத்துக்கொண்டு, சினிமா நினைவுகளுடன் காலத்தைக் கழித்து வருகிறார் இந்த மூத்த கலைஞர்.
