கேரளாவில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், ராமாயணக் கதையைச் சிறுவர்கள் மாற்றி எழுதியது குறித்துப் பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்தப் பேச்சில், ராமர் தென்னிந்தியாவிற்கு வரும்போது ராவணனின் நிலத்தில் பழங்களைச் சாப்பிடுவதாகவும், அதற்கு ராவணன் தரப்பு 2000 டாலர் மற்றும் ஜிஎஸ்டி கேட்பது போலவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் இந்தப் பேச்சு இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அமித் சச்தேவா உள்ளிட்ட பலர் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்தக் கதையைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ் ராஜ், வடக்கிலிருந்து வருபவர்கள் தென்னிந்திய மக்கள் மீது இந்தி மொழியையோ அல்லது உணவுப் பழக்கங்களையோ திணிக்கக் கூடாது என ஆவேசமாகத் தெரிவித்தார். “ஒரே நாடு, ஒரே மதம்” என்ற கொள்கையைச் சாடிய அவர், தென்னிந்திய கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பல மாதங்களுக்கு முன்பு பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால், அவருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருவதுடன் சட்ட ரீதியான சிக்கல்களும் அதிகரித்துள்ளன.
