திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயை காண்பதற்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் கைவரிசை காட்டியுள்ளனர். இதில் திருப்பூர் மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் ஜெயராமனின் 5 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் பல பெண்களின் நகைகள் திருடு போயுள்ளன. இந்த துணிகரத் திருட்டு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொருபுறம், கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் உள்ளிட்ட பலருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. போதிய காற்றோட்டம் இல்லாமலும், நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மயக்கமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்புக் கருதி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
