திக் திக் நிமிடம்!… சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி… 9 பேர் கவலைக்கிடம்… கிராமத்தையே உலுக்கிய வெடிவிபத்து…!!!

By Muthu Mani on சித்திரை 13, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கம்பக்கோட்டை பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில், அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் கருகி ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அடுத்தடுத்து நான்கு முறை பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த விபத்தில் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“குட்டி ஜப்பான்” எனப்படும் சிவகாசி மற்றும் அதன் அருகிலுள்ள சாத்தூர் பகுதிகளில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமலும் முறையான அனுமதியின்றியும் பல பட்டாசு ஆலைகள் செயல்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய விதிமீறல்களால் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் அப்பாவி தொழிலாளர்களின் உயிரைப் பறிப்பதோடு, பலரை உடல் உறுப்புகளை இழக்கச் செய்து வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. அண்மையில் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்த சோகம் மறைவதற்குள், மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.