மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியான நிவாரி மாவட்டத்தில், காதல் மற்றும் திருமணத் தகராறு காரணமாக அரங்கேறியுள்ள இந்த இரட்டைக் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான வர்ஷா கேவத் என்ற இளம்பெண், சனிக்கிழமை மதியம் கிணற்றுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மாயமானார். அவரைத் தேடி வந்த காவல்துறையினர், மொபைல் போன் சிக்னலை வைத்து நடத்திய சோதனையில், பூச்சா கி பஹாடி மலைப்பகுதியில் வர்ஷா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்தக் கொலை நடந்த இடத்திலிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில், ஜான்சி பகுதியைச் சேர்ந்த ஹரேந்திர கேவத் என்ற 24 வயது இளைஞன் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டார். விசாரணையில், ஹரேந்திரா அந்தப் பெண்ணின் தாய்வழி அத்தையின் உறவினர் என்பது தெரியவந்தது. சனிக்கிழமை மதியம் முதலே ஹரேந்திராவும் வீட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், இருவரும் அந்த மலைப்பகுதிக்குச் சந்திக்கச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
இறந்த வர்ஷாவிற்கு சமீபத்தில் வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு அல்லது ஆத்திரத்தின் காரணமாக, ஹரேந்திரா அந்தப் பெண்ணை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று மீன்பிடி கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து செந்திரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
