பாஜக எம்.எல்.ஏ.வும், கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்றுக்காக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் (KMCH) அவர் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு செலுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்து அலர்ஜியை (ஒவ்வாமை) ஏற்படுத்தியதால், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிற்காக அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசனின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருந்து ஒவ்வாமையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் முழுமையாக குணமடைய இன்னும் சில நாட்கள் தேவைப்படுவதால், அடுத்த நான்கு நாட்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரது தேர்தல் பிரச்சாரப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
