கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே இன்று திமுக வேட்பாளர் தளபதி முருகேசனின் தேர்தல் பணிமனை அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஏராளமான கட்சித் தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது, சாலையைக் கடக்க முயன்ற திமுக தொண்டர் ஒருவர் மீது எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் அவரது வலது கால் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதமாக நசுங்கி, அவர் படுகாயமடைந்தார்.
விபத்து நடந்தவுடன் அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மகிழ்ச்சியாகத் தொடங்கிய தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த திமுகவினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
