சென்னை விமான நிலையத்தில் இன்று (ஏப். 8) செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்கள் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்துப் பேசிய அவர், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிறைவடைய உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அதே சமயம், தவெக தலைவர் விஜய் தனது பரப்புரையில் குறிப்பிட்டிருந்த ‘ஜனநாயகன்’ பட முடக்கம் குறித்த சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த், “ஸாரி, இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். விஜய்யின் அரசியல் விமர்சனங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ரஜினிகாந்தின் இந்த மௌனம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
